அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Thursday, December 10, 2015

இறைவன் மீது நம்பிக்கை கொள்வதற்கு தக்தீரின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியம்.


திருக்குர்ஆனில் இது பற்றி தனித் தனியாக குறிப்பிடப்படாமல் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதிலேயே இணைத்துக் கூறப்பட்டுள்ளது. என்றாலும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இதனைத் தனியாக எடுத்துரைத்துள்ளார்கள். இறைவனின் பண்புகளை ஏற்றுக் கொண்டால்தான், அவனை உண்மையான முறையில் ஏற்றுக் கொண்டதாக ஆகும். அவ்வாறில்லாமல் இறைவனை மட்டும் ஏற்றுக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அப்படிப் பார்த்தால் பல நாத்திகர்களும் இறைவனை ஏற்றுக் கொள்கிறார்கள். ஏனெனில் ‘நாங்கள் இறைவனை நம்புவதில்லை என்று கூறுவது தவறாகும். நாங்கள் இறைவனை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அவன் வானவர்களை இறக்குகிறான்; நபியை அனுப்புகிறான்; அவன்
புறமிருந்து தூது வருகிறது; மேலும் வேதங்கள் கொடுக்கப்படுகின்றன; போன்றவற்றை நாங்கள் ஏற்ப்பதில்லை. ஆயினும் இந்த உலகத்தை ஆளுகின்ற ஒரு மாபெரும் சக்தி இருக்கிறது என்று நம்புகிறோம். அதனை நாங்கள் இயற்கையின் ஆற்றல் என்கிறோம்’ என்று நாத்திகர்களும் கூறுகிறார்கள்.

ஆக நாத்திகர்களும் வெளிப்படையான முறையில் இறைவனை மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் எப்படிப்பட்ட இறைவனை நம்புகிறார்கள்? தமக்கு எந்தவித தொடர்பும் இல்லாத இறைவனை நம்புகிறார்கள். அவர்கள் இறைவனை நம்புவது எப்படிப்பட்டதென்றால், ஒருவர் இன்னொருவரிடம் எங்கள் பணம் உங்கள் பணம்தான் என்று கூறினாராம். ஆனால் தன் பணத்தை மற்றவர் எடுத்து கொள்வார் என்பதை அவர் ஒருபோதும் எண்ணிப்பார்க்கவில்லை. நாத்திகர்கள் இறைவனை நம்புவது இப்படிப்பட்டதுதான்.

அவ்வாறே, சிலர் ‘ஓர் இருப்பு, ஒரு சக்தி, ஓர் ஆவி இருக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அனால் ‘இப்படிச் செய்யுங்கள்; இப்படிச் செய்யாதீர்கள் என்று எங்களுக்குக் கட்டளையிடக் கூடிய இறைவன் இருக்கிறான் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை’ என்று கூறுகின்றனர். நாத்திகர்களிடம் இப்படிப்பட்ட கொள்கைகள் உள்ளன. இவ்வாறே ஒருவருக்கு இறைவன் மீது ஈமான் இருக்குமென்றால், அவ்வாறான ஈமான் நாத்திகர்களிடமும் இருக்கிறது எனலாம். ஆனால் அது போதுமானதல்ல. இறைவன் மீது ஈமான் கொள்ளுதல் என்பதன் பொருள் இறைவன் என்ற ஒருவன் இருக்கின்றான் என்று நம்புவதை மட்டும் குறிப்பிடாது. மாறாக, அவனது பண்புகளையும் நம்ப வேண்டும். இறை பண்புகளை நம்பினால் மட்டும் போதாது; அவை வெளிப்படுகின்றன என்றும் நம்ப வேண்டும். இதற்குப் பெயர்தான் தக்தீரை (இறை நியதியை) நம்புதல் என்பதாகும்.

சுருக்கமாக, இறைவன் மீது ஈமான் கொள்ள வேண்டுமென்றால்,

  • அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வேண்டும். 
  • அல்லாஹ்வின் பண்புகளை நம்ப வேண்டும். 
  • இறை பண்புகள் வெளிப்படுகின்றன என்பதை நம்ப வேண்டும்.
இந்த மூன்றாவது அம்சத்தைத்தான் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் ‘கத்ர்’ (விதி_ என்று பெயர் வைத்து தனியாக எடுத்துரைத்தார்கள். அடியார்களுடன் தொடர்புள்ள இறைபண்புகளின் வெளிப்பாடே ‘கத்ர்’ எனப் பெயர் பெரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.